படிப்பினை

ஒரு நாள் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் வலி, மனதை அறுத்துக் கொண்டியிருந்தது.  எனக்கு நானே எவ்வளவோ சமாதானம் சொல்லியும், ஆறுதலடையவில்லை.  பொதுவாய், என்னிடம் பணம் வாங்கியவர்கள், அவர்களாக திரும்பக் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்வேன்.  கேட்பதில்லை.  அவர்கள் மிகுந்த சிரமப்பட்டுக் கொடுத்தால், முடியும் போது கொடுங்கள் என்று கூறி விடுவேன்.  இதையே சாதகமாகக் கொண்டு, என்னை எப்போதுமே சிலர் ஏமாற்றிக் கொண்டேயிருப்பதால், இந்த இயல்பு மாறி விட்டது.  என் பணத்தேவையின் காரணமாகக் கூட மாறியிருக்கலாம்.

ஒரு சுற்றுலா மையத்தில் தங்குமிட முன்பதிவுக்கும், உணவுக்கும், முன்பணமாய் ரூ.4000/- ஒருவரிடம் கொடுத்திருந்தேன்.  எதுவுமே ஏற்பாடு செய்யாமலும், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி விட்டார்.  இது குறித்த விபரங்களை மாஞ்சோலை http://veyilaan.com/2012/07/20/manjolai/ பதிவில் படித்துக் கொள்ளலாம்.  இந்த சம்பவம் தான் எனக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

மற்றது போகட்டும், கொடுத்த பணத்தையாவது திரும்ப வாங்கலாம் என்பதற்காக, சம்பந்தப்பட்ட குமார் என்பவரை, பல முறை கைப்பேசியில் அழைத்த போது, அலட்சியமாயும், தொடர்பறுத்தும், அருகில் இருக்கும் யாரிடமாவது தவறான அழைப்பு போல பேசச் செய்வதுமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  இப்படியே ஒன்றிரண்டு மாதங்களாகி விட்டது.  பொறுத்துப் பார்த்து விட்டு, காவல் நிலையத்தில் எழுத்தராய் பணிபுரியும் என் இளவலிடம் தகவல் சொன்னேன்.  இவ்வளவு நாள் எங்கிட்டே சொல்லாம, என்ன பண்ணிட்டிருந்தே? எனக் கடிந்து விட்டு, அவரே தொடர்பு கொண்டார்.  சகோதரர் பேசும் போது, வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்தால் பணத்தை கட்டி விடுகிறேன் என்று உறுதி கூறியிருக்கிறார்.  அதைக் கொடுத்த பின்னும் பணம் வரவில்லை.  ஒரு சில நாட்களில் தொடர்பு கொண்டிருந்த அலைபேசி எண்ணையும் மாற்றி விட்டார்.

இதற்கிடையில், குமாரின் தந்தையின் பெயர், வேலை, தொடர்பு எண் போன்ற விபரங்கள் சகோதரரின் நண்பர்கள் மூலம் கிடைத்து விட்டது.  அவரும் காவல்துறை தான்.  அவரிடம் பேசும் போதெல்லாம், நான் அவன்ட்ட சொல்லி, பணத்தைக் கட்டச் சொல்றேன் என்று சொல்லிக் கொண்டேயிருந்தாரே தவிர,  நாட்கள் பலகடந்தும், ஒரு பலனும் இல்லை.

சகோதரரின் ஆலோசனையின் பெயரில், அப்பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பி வைத்தேன்.  நல்லவேளையாக, நான் குமாரை ஒரு படம் எடுத்து வைத்திருந்தேன்.  வங்கியில் பணம் கட்டிய ரசீதையும் பத்திரமாய் வைத்திருந்தேன்.  இவையனைத்தையும் இணைத்து அனுப்பி, சில மாதங்களாகியும் அதற்கு ஒரு பதிலும் இல்லை.


திரும்பவும் சகோதரர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறி,  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு அனுப்பச் சொல்லி ஆலோசனை கூறினார்.  அதன்படி அனுப்பினேன். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு :

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.  இந்த உரிமையை, பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது.  இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் படி

1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்
2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.
4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.

போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.

http://goo.gl/cCla8

http://www.tnpolice.gov.in/rti.html

ஊட்டியில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் இருந்த போது, அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து தொடர்ச்சியாக மூன்று, நான்கு தடவை தொடர்ச்சியான கைப்பேசி அழைப்பு வந்தது.  அடுத்து, நண்பர் ராகவன் எண்ணிலிருந்து தொடர்ச்சியான அழைப்பு.  கூட்டத்தின் முக்கிய விதி பாதியில் எழுந்து வெளியே செல்லக் கூடாது என்பது.  இருந்தும், வெளியே வந்து அநாமதேய எண்ணுக்கு அழைத்தேன்.

 

நன்றிHindu Business Line

எதிர்முனையில் பேசியது, காவல் நிலைய எழுத்தர்,

நீங்கள் முதலில் குமார் என்பவர் மீது அனுப்பிய புகார் மனு கிடைத்தது.  அடுத்து ஆர்.டி.ஐ (RTI – Right to information act) மனுவும் கிடைத்தது.  அதன்படி, குமார் என்பவரை விசாரித்தோம்.  பணத்தைத் திருப்பித் தருவதாக சொல்லுகிறார்.  உடனே வந்து பணத்தை வாங்கிச் செல்லுங்கள் எனக்கூறினார்.

பதிலுக்கு நான், அவ்வளவு தூரம் பயணம் செய்து வரமுடியாது.  அந்தப் பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டேன்.  அதற்கு அவர், உங்களுக்குத் தெரிந்த உள்ளூர் நபரை பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சிக் கடிதத்துடன் அனுப்புங்கள்.  கொடுத்து விடுகிறேன் என்றும் சொன்னார்.

அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? ஒரு உதவி வேண்டுமென இணைய நண்பர்களிடம் விசாரித்த போது, நண்பர் இராஜகோபால் தொடர்பு கொண்டு, என்ன வேண்டும்? சொல்லுங்கள்.  உதவத் தயாராய் இருக்கிறேன் என்று சொன்னார்.  விபரங்கள் கூறியதும், அதே ஊரிலிருக்கும் அவரது தந்தையார் தொடர்பு கொண்டார்கள்.  விபரங்கள், மனுவின் நகல் ஆகியவற்றை அனுப்பினேன்.  இரண்டு, மூன்று முறை எழுத்தரைத் தொடர்பு கொண்டும், அவரிடமிருந்து முறையான பதிலில்லை.  தம்முடைய உள்ளூர் செல்வாக்கின் மூலம் தொடர்பு கொண்ட பின்,  காவல் நிலையத்திலிருந்து பணம் பெறப்பட்டது.

கோடி ரூபாய் கிடைத்தாலும், கிடைக்காத மகிழ்ச்சி இந்தப் பணம் ரூ.4000/- திரும்பக் கிடைத்த போது அடைந்தேன்.  விவரிக்க வார்த்தைகளே இல்லை.  என்னுடன் சுற்றுலா வந்திருந்த நண்பர்களிடம் சொன்ன போது, அவர்கள் இதை நம்பவே இல்லை.  முழு விபரமும் கூறியபின் அவர்களுக்கும் மகிழ்ச்சி!

அதன்பின், ஓரிரு நாட்களுக்குப் பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய மேற்கண்ட கடிதமும் கிடைத்தது.

இதற்காக, மிகுந்த சிரமப்பட்ட அப்பா சண்முக வேலாயுதம் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.  மேலும், இதில் பேருதவியாய் இருந்த சகோ. சேது, நண்பர். ராஜ கோபால் ஆகியோருக்கும் இதை நிச்சயமாய் எழுதுங்கள், எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என வற்புறுத்திய சரவண குமாருக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றி!

யாருக்காவது உதவக்கூடும் என்ற எண்ணத்தில் தான் இப்பதிவும் மனுவின் பிரதிகளும் இத்துடன் இணைத்திருக்கிறேன்.  சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பெயர்கள், மற்றும் அனைத்து பெயர்களையும் மறைத்திருக்கிறேன்.  இந்த மனுவுக்கும் முறையான பதில் கிடைக்க வில்லையென்றால் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.

இதில் முக்கியமான விசயம், சம்பந்தப்பட்டவரின் முகவரி தெரியாது, ஆனால் படம் இருந்தது, மேலும் வங்கியில் பணம் செலுத்திய ரசீதும் இருந்தது.  அது தான் முக்கிய சாட்சி ஆவணமாக கருதப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சாதாரண குடிமக்களுக்கு கிடைத்த ஒரு அருமையான பொக்கிஷம்.

பெங்களூர், ஜூலை 20

பத்மாவதி தாயாரைக் காதலித்த திருப்பதி ஏழுமலையான், அவரைத் திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்தக் கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், தேவஸ்தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதைப் போன்று தவறாகவோ, விளையாட்டாகவோ பயன்படுத்தினால் அரசு, இச்சட்டத்தை முடக்கும் அபாயமும் இருக்கிறது.  ஏற்கனவே நீதிபதி இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இச்சட்டத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள அரசே இலவச இணையச் சான்றிதழ் படிப்புத் திட்டம் வைத்திருக்கிறது.  படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வலைத்தளங்களில் சென்று அறிந்து கொள்ளலாம்.

http://goo.gl/FQdBd
http://goo.gl/IIsZU

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு மனு அனுப்பிய நான்காம் நாள், என் மனு மீது நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, விசாரித்து பணத்தையும் வசூலித்து விட்டார்கள்.  த.அ.உ.ச மனுவை விசாரணை செய்து, மேலதிகாரிகளுக்கு  பதில் அனுப்ப வேண்டுமென்பதால், உடனே வந்து வாங்கிப் போகச் சொல்லியும் என்னை அவசரப்படுத்தினார்கள்.  எல்லாவற்றிற்கும் சட்டமும், வழிமுறைகளும் இருக்கிறது.  கேட்கிற விதத்தில் கேட்டால் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.

என்னில் நான்

 

 

 

Image

 

மதுரை என் விகடன் வலைத்தளத்தில் என் வலைத்தள அறிமுகம் - http://goo.gl/EO2Gs

- விகடனுக்கு நன்றி!

சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு வாரிசு யார்?  சுவிஸ் வங்கியில் இருக்கும் ஜமீனின் பணம், நகைகள் எவ்வளவு?  என்று செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் அவரைக் குறித்த நாட்டுப்புறப் பாடல் ஒன்று.

சிவகிரி ஜமீன்தார் இறந்தபோது தோன்றிய பாடல்கள் இரண்டு கீழே தரப்படுகின்றன. அவற்றுள் முதல் பாடல் சிவகிரி ஜமீன்தார் சதியால் கொல்லப்பட்டார் என்று மறைமுகமாகக் கூறுகிறது. அவர் இறந்த இடம் குற்றாலம். சிறிய ஜமீன்தாரை சின்னசாமி என்று அழைப்பதுண்டு. அவர் வடக்கேயிருந்து வருகிறார் என்று அவரைப் பார்க்க மக்கள் கூடியிருக்கிறார்களாம்.

இரண்டாவது பாடலில் ஜமீன்தார் கலியாண மகால் கட்ட உத்தரவிட்டு, அது கட்டி முடிந்து விட்டதாகவும் ஆனால், அம்மகாலில் அவர் உட்காரவில்லையென்றும் அதற்கு முன்னரே கைலாச குழிக்குப் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சிவகிரி ஜமீன்தார்-1

பாக்குப் பொடி நறுக்கி
பல்விளக்கித் தீத்தம் பண்ணி
காப்பித் தண்ணி சாப்பிட்டிட்டு
கச்சேரிய செய்த தெப்ப?
கச்சேரி வாசலிலே
லட்சம் ஜனம் கூடியிருக்க
கருத்த துரை இல்லாம
களையும் பொருந்தலையே
கிறிச்சு மிதியடியாம்
கீ கண்ணுப் பாருவையாம்
வடகா பிரகரைக்கு
வாரதெப்போ நம்ம துரை
சோணப் பாறை மொந்தலிலே
சூரியனும் உதிக்கு முன்னே
மண்டி போட்டுச் சுட்டாராம்
மன்னம் பொன்னு சின்னசாமி
காக்கா இறகு போல
கல்லணைத் தண்ணி போல
மறிச்சாராம் மறிபடாது
மகராஜன் ஆத்துத் தண்ணி
ஆடழுக,மாடழுக
அஞ்சாறு லட்சம் ஜனமழுக
சிவகிரி ஜனங்களெல்லாம்
தெருத் தெருவா நின்னழுக

சிவகிரி ஜமீன்தார்-2

பிறந்தது சிவகிரி
வளர்ந்தது ஆத்துப்பட்டி
மாண்டது குத்தாலம்
மகாராஜா நம்ம துரை
மதுரையிலே குதிரை வாங்கி
மல்லியப்பூ சேடங் கட்டி
அடிக்காக நம்ம துரை
ஆத்து மணல் தூள் பறக்க
வடக்க இருந்தல்லவோ
வாராக சின்னசாமி
பதினெட்டு பட்டி ஜனம்
பாக்க வந்து காத்திருக்கு
பட்டணங்கள் போகலாமா
பந்தயங்கள் கூறலாமா
இந்தக் கலியுகத்தில்
இஷ்டர்களை நம்பலாமா
சிவகிரி மகாராசா
செல்வத் துரை பாண்டியன்
நீசநிதியாலே மோசம் வரலாச்சே
மானழுக, மயிலழுக
மாடப்புறா கூட அழுக
சிவகிரி ஜனங்களெல்லாம்
தெருத் தெருவா நின்னழுக
கல்யாண மால்
கட்டச் சொல்லி உத்தரவு
ஒரு நாள் ஒரு பொழுது
மகாராசா உக்காந்து பாக்கலியே
காத்திய மடத்தோரம்
கைலாசகுழி வெட்டிருக்கு
வெட்டி நாளாகுது
வெரசா வரும் மோட்டார்காரே.

வட்டார வழக்கு:

காத்திய மடம்-கார்த்திகை நாள் விழா நடைபெறும் மடம் ;

மொந்தல்-மூலை ; அழுக-அழ

சேகரித்தவர் :
S.M.கார்க்கி

இடம் : சிவகாசி

குறிப்பு : காலாவதியான வலைத்தளத்திலிருந்து இப்பொக்கிஷத்தை மீட்டெடுத்து சேமிப்புக்காக இங்கே பதிவிட்டிருக்கிறேன். யாருக்கேனும் ஆட்சேபணை இருந்து, பின்னூட்டத்தில் சொன்னால் எடுத்து விடுகிறேன்.

மாஞ்சோலை

நெல்லை மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் பசுமையும், குளுமையும் நிறைந்த சுற்றுலா ஸ்தலம் அது. திருப்பூரிலிருக்கும் நண்பர்கள், நீலகிரி தவிர்த்து ஒரு மாறுதலான இடத்துக்குப் போக வேண்டுமென சொன்னபோது மாஞ்சோலையைப் பரிந்துரைத்தேன். உடன் ஒப்புக் கொண்டு உணவு, உறைவிட முன்பதிவு செய்யும் பொறுப்பும் எனக்கே வந்தது.

ஏற்கனவே, தூத்துக்குடியைச் சேர்ந்த நண்பர் ராகவன் அவ்விடத்துக்கு சென்று வந்ததாய் சொன்னது நினைவுக்கு வர, அவரை அழைத்து விசாரித்ததில், மணிமுத்தாறில் இருக்கும் குமார் என்ற நண்பரின் தொடர்பெண்ணைக் கொடுத்தார். குமாரைத் தொடர்பு கொண்டபோது, வரும் விருந்தினர்களுக்கு தேவைப்படும் அறை முன்பதிவு, உணவு போன்றவைகளை மிகச்சிறந்த முறையில் இதுவரை செய்து கொடுத்திருக்கிறேன், உங்களுக்கும் அப்படியே சிறப்பாய் செய்து தருகிறேன் என்று சொல்லி, செலவுகளுக்கு ரூ.4000 அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அவருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் தம் நண்பரின் கணக்கில் கட்டுமாறும் கேட்டுக் கொண்டார். அதன் படியே ரூ.4000 கட்டியாயிற்று.

கிளம்புவதற்கு முதல் நாள் அவரைத் தொடர்பு கொண்டு வருகையைத் தெரிவித்த போது, வருமாறும் ஏற்பாடுகள் அனைத்தும் செய்தாயிற்று என்றும் உறுதியளித்தார். திருப்பூரிலிருந்து இரவு 10 மணியளவில் இன்னோவா வண்டியில் ஐவர் கிளம்பினோம். இடைநிறுத்தி, வாங்கி வந்திருந்த உணவு உண்டு, தொடர் பயணமாய் காலை 7 மணியளவில், கல்லிடைக்குறிச்சி வந்து காலை உணவுகளைக் கட்டிக் கொண்டோம். அடுத்து மணிமுத்தாறு ஆயுதப்படை வளாகம். குமாரைத் தொடர்பு கொண்டு, வந்த தகவல் சொல்லிக் கா…..த்….திருந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து வந்த அவர், எங்களை மணிமுத்தாறு அணைக்கட்டின் முகப்பில் இருக்கும் வனச்சோதனைச் சாவடிக்கு அழைத்து வந்து, அருவிக்குச் செல்ல அனுமதி வாங்கிக் கொடுத்தார். அருவியில் ஆனந்தமாய் குளித்து விட்டு காலை உணவை முடித்து திரும்பவும் கீழிறங்கி சோதனைச் சாவடிக்கே வந்து சேர்ந்தோம்.

குமார், முத்து என்ற நபரை தன் உறவினர் என அறிமுகம் செய்து வைத்து, இவர் உங்கள் கூடவே வந்து, தங்கி வேண்டிய உதவிகளை செய்வார் என்றும், தனக்கு வேறு முக்கிய வேலை இருப்பதாகவும், சொல்லிக் கிளம்பி விட்டார். அங்கிருந்து, மாஞ்சோலை சோதனைச் சாவடி கடந்து, கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் தொலைவுள்ள நாலு முக்கு என்ற இடத்தை வந்தடைந்தோம். சாலைகள் ரொம்பவும் பழுதடைந்திருந்ததால் ஊர்ந்து தான் வரமுடிந்தது. நாலுமுக்கில் ராஜ் கடை என்ற ஒரே ஒரு உணவகம் மட்டுமே உண்டு. அங்கு முன் பணம் கொடுத்து உணவு ஏற்பாடு செய்திருப்பதாக குமார் சொல்லியிருந்தார். அதை விட்டால் விரதம் இருக்க வேண்டியது தான்.

நாலுமுக்கு ராஜ் கடை

சரி! ரூமைக் காமிங்க.  தூங்காமல் வண்டில வந்திருக்கோம்.  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாப்பிடப் போகலாம்.

என முத்துவிடம் சொன்ன போது,

அந்தப் பெய எங்கே ரூம் போட்டிருக்கான்னு தெரியல. இரிங்க! போனடிச்சு கேக்கலாம்!

என்று சாவகாசமாய்ச் சொன்னார். எந்த அலைபேசியும் உயிரோடு இல்லை. அங்கிருந்த ஒரேயொரு பொதுத் தொலைபேசி மட்டுமே தொடர்புக்கு ஒரே வழி. அதன் மூலம் குமாரைத் தொடர்பு கொண்ட போது,

எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சுண்ணே! நீங்க கவலைப்படாதீங்க! சாப்பாட்டுக்கு ஒரு பயட்ட பணத்தைக் கொடுத்து விட்டேன். அவங்கொடுக்கல போல? நீங்க உங்க கூட வந்தாரே, அந்ந ஆள்ட்ட கொடுங்க!

என்று சொன்னார். அறை பற்றி முத்துவிடம் கேட்ட போது,

இங்கேருந்து இன்னுங்கொஞ்ச தொலவட்டுல குதிரை வெட்டினு ஒரு எடம் இருக்குண்ணே! அங்கன தான் ஒங்களுக்கு ரூம் போட்டிருக்கானாம்!

என்று சொன்னார். உணவுக்கு, முன் பணம் கொடுத்து தயார் செய்து வைக்கச் சொல்லி விட்டு, குதிரை வெட்டிக்கு கிளம்பினோம்.

குதிரைவெட்டி காண்கோபுரம்

வண்டி ஓட்டும் நண்பர், இன்னும் போகணுமா? என்று மிரண்டார். இன்னா, கொஞ்ச தொலவு தான். ஏறுங்க! போலாம் என்று முத்து ஆறுதல் சொன்னார். முன்னிலும் மோசமான சாலைகள். இல்லையில்லை…. சாலைகளே இல்லை. வெறும் பாதைகள் தான். ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் பயணித்து குதிரை வெட்டி வந்தடைந்தோம். அந்த இடத்தில் வனத்துறை விடுதி மட்டுமே இருந்தது. விடுதியின் பணியாளரிடம் விசாரித்ததில் அப்படி முன்பதிவு எதுவும் செய்யப்படவில்லை. அறைகளும் காலி இல்லை என்று சொல்லி விட்டார். சாம, தான முறைகளில் (சாமம்-இன்சொல் கூறல், தானம்-விரும்பிக் கொடுத்தல்) முயற்சித்துப் பார்த்தும் முடியவில்லை. பேத, தண்டத்தை (பேதம்-மிரட்டுதல், தண்டம்-தண்டித்தல்) முயற்சிக்க முடியவில்லை. அங்கிருந்து குமாரைத் தொடர்பு கொண்ட போது, அவருடைய அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

குதிரைவெட்டி காண் கோபுரத்திலிருந்து காணும் காட்சி

கோபத்தோடு கூடிய பசியோடு ராஜ் கடைக்கு திரும்ப வந்து, மதிய உணவை முடித்தோம். எங்களுக்கு வேண்டிய எல்லா?!? உதவிகளையும் செய்வதற்காக எங்களோடு வந்த முத்துவிடம் பேதத்தை பிரயோகித்தோம்.

எனக்கு எதுவும் தெரியாது சார்! (அண்ணன் இப்போ சார்! ஆயிடுச்சு) இவங்களோட போ! சாப்பாடு வாங்கிக் கொடுப்பாங்க. கையில செலவுக்கு காசு கொடுப்பாங்கனு சொல்லி அந்தப் பெய வண்டில ஏத்தி அனுப்பிச்சாம் சார்!

என்று அழாத குறையாய்ச் சொன்னார்.

குதிரைவெட்டி காண் கோபுரத்திலிருந்து தெரியும் மலைத்தொடர்

மணிமுத்தாறு நோக்கி திரும்ப பயணிக்க ஆரம்பித்தோம். நண்பர்கள் கூடவே பயணித்த முத்துவை காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தனர். ஒட்டு மொத்த ஏற்பாடுகளின் காராணகர்த்தாவான எனக்கு கிடைக்க வேண்டியது, முத்துவுக்கு கிடைக்கிறது என எனக்குப் புரிந்தது. மிகவும் தர்மசங்கடமான நிலையில் வண்டியில் அமர்ந்திருந்தேன். யாரோடும் பேசவில்லை. முதல்நாள் இரவு கிளம்பி, மறு நாள் மாலை வரை வண்டியிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்திருக்கிறோம். மனதும், உடலும் மிகவும் பலவீனமாய் இருந்தது. நண்பர்களை கூட்டி வந்து, இப்படி ஆகி விட்டதே என்ற பெரும் மன உளைச்சலிலும், வருத்தத்திலும் இருந்தேன். யாருடனும் பேசவில்லை. என் நிலைமையைப் பார்த்து, நண்பர்கள் எனக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தனர். திரும்பவும் திருப்பூருக்கே செல்லும் மனநிலையில் அனைவரும் இருந்தனர்.  எனக்குச் சம்மதமில்லை.

மாஞ்சோலை தேயிலைப் பண்ணை

காக்காச்சி என்ற இடத்தை அடைந்ததும் அனைவரும் சமநிலை அடைந்தனர்.  பின் மனம் மாற்றி, ஒரு வழியாய் அவர்களை குற்றாலத்துக்குத் திருப்பினேன். குற்றாலத்தில் இதமான தட்பவெப்ப நிலையும், அருவிகளில் சுமாரான தண்ணீரும் விழுந்து கொண்டிருந்தது மனதுக்கு சிறு ஆறுதலாய் இருந்தது. நண்பர்களை மட்டும், அருவிக்கு சென்று வருமாறு கூறிவிட்டு அறைக்குள்ளேயே இருந்தேன். எத்தனையோ இடங்களுக்கு சென்றிருந்தும், இப்படியொரு மோசமான அனுபவம் நிகழ்ந்ததில்லை. குமாரை அறிமுகம் செய்த தூத்துக்குடி ராகவனை அழைத்து நடந்தவைகளைச் சொன்னேன். அவரும், என் வருத்தத்தைப் பகிரவும், ஆறுதல் சொல்லவும் முடிந்ததே தவிர, வேறொன்றும் செய்ய முடியவில்லை.

காக்காச்சி என்ற இடத்திலிருக்கும் அழகிய புல்வெளி

மறுநாள் மதியம் கிளம்பி திருப்பூர் வந்தடைந்தோம். மிகப்பெரிய மழைக்கான அறிகுறி திருப்பூரின் எல்லைக்குள் நுழையும் போதே தெரிந்தது. நனைந்து கொண்டே அனைவரும் வீடடைந்தோம். நீண்ட வருடங்களுக்குப் பின் திருப்பூர் கண்ட மழை….. பெருமழை…. மிகப்பெரு மழை மனநிலைக்கு உகந்ததாய் இருந்தது.

படங்களுக்கு நன்றி – Mohan Photography, Krishps & Anand Photoworkshop

கருவாயன்

திண்டுக்கல்லில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடியின் ஆதரவாளரும் கொல்லப்பட்டார்…………

சீத மகன் கருவாயனா? என்னத்தா சொல்றே?

அவந்தான் மச்சினி! கருவாக் கணேசன்.  கடேசிப் பய.  இப்பந்தான் செயபால் கடைல நின்னுட்டிருந்தப்போ, சண்டியர் கடைல வேல பாக்க பையன் சொல்லீட்ருந்தான்.

கோவக்காரந்தான்.  ஆனா, உசுர எடுக்கத் துணிய மாட்டான்த்தா.  சும்மா மல்லுக்கட்டி ரெண்டு தட்டு தட்டீருப்பான்.

இல்லங்கேன்ல.  நல்லாத் தான் கேட்டுட்டு வந்தேன்.  கொடலு, குந்தாணியெல்லாம் கீழ கெடந்துச்சாம்.  எல்லாத்தயும் அள்ளிப் போட்டுத் தான் காட்டாஸ்பத்திரிக்கு தூக்கீட்டு போனாகளாம்.

அடச்சனியம் புடிச்சவனே! என்னத்துக்குத் தான் இந்தக் காரியம் பண்ணுனானோ?  சீதைக்கு, பெத்த வயிறு பத்தி எரியுமே……

இந்தப் பாட்டுப் பதியுத கட என்னிக்கு தெருவுக்குள்ள நொழைஞ்சதோ, அன்னைலருந்து சனியம் புடிச்சிட்டுது.

பட்டாசலில் படுத்திருந்த எனக்கு அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த குரல், எலத்தூராவோடதுனு கண்டுபிடிக்க முடிஞ்சது.  ரெண்டு பேரும் தெக்கருந்து இங்க வந்து வாக்கப்பட்டதால, பேச்சுல தின்னவேலி வாடையடிக்கும்.

கணேசன் என்ற பெயர் காலப்போக்கில் கருவாயன் என்றே நிலைத்து விட்டது அவனுக்கு.  அதுவே சரியான அடையாளமும் கொடுத்தது.  ஆள் கன்னங்கரேர்னு ஓங்கு தாங்கா இருப்பான்.  சந்துக்குள்ள நடந்து போனா, வீட்டுல தரையில படுத்திருக்கும் நமக்கு, தரையெல்லாம் அதிர்வது தெரியும்.  எப்பவும் உதட்டின் இரு விளிம்பிலும் புண்ணாகி வங்கு பிடிச்சு ப் போயிருக்கும்.  பெரும்பாலும் அழுக்குக் கைலியும், 4 பித்தான்கள் கழட்டி விடப்பட்ட சட்டையோடு தான் அலைவான்.  வேலை…….. புதுப்படம் வந்த ஒரு வாரத்துக்கு அந்த தியேட்டருக்கு வெளியே திருட்டு டிக்கெட் வித்துட்டிருப்பான்.  மத்தபடி எந்த வேளையிலும் வேலைக்கு போனதே கிடையாது.

கேசட் புழக்கத்துக்கு வந்ததும், கேட்ட பாட்டை பதிஞ்சு கொடுக்குற கடைகளும் ஊருக்குள்ள பெருத்துப் போச்சு.  ரெண்டாங்கேட்டுக்கிட்ட இருந்த கேசட் கடை தான் முதல்ல பிரபலமா இருந்துச்சு.  இப்பம் எங்க தெருவுலயும் ஒரு கடை புதுசா வந்திச்சு.  அத முதல் போட்டு ஆரம்பிச்சது நாலு பேர்.  சேது மாமாவும் அதுல ஒரு முதலாளி! பொழுதன்னிக்கும், கட வாசக்கதவுக்குப் பக்கத்துலேயே ஒரு ஸ்டூல் போட்டு ஒக்காந்திருப்பாரு.  அந்தப் பக்கம் போனாலே ஏ மாப்ள எங்கே போற? வாண்ணா கடேல கொஞ்ச நேரம் உக்காந்திரு! கூப்ட்டு உக்கார வச்சிட்டு,  இருக்கவுக எல்லாம் டீ குடிக்கப் போயிருவாக.   பொழுது போகலைன்னா, நானும் அந்த மியூசிக்கல்ஸ்ல தான் உக்காந்திருப்பேன்.  ஜல், ஜல்னு சத்தத்தோட ஸ்டீரியோவுல பாட்டுக் கேக்க முடியும்.  எழவு, எந்தப் பாட்டை அங்கன கேட்டாலும் நல்லா இருந்து தொலையும்.

மியூசிக்கல்ஸ்ல பாட்டு பதியுற வேலை செஞ்சவரோட கையெழுத்து ரொம்ப அழகா இருக்கும்.  நாலைஞ்சு கலர்ல பேனா வச்சிருப்பார்.  படத்து பேருக்கு ஒரு கலர், பாட்டுக்கு ஒரு கலர், பாடுனவங்க பேருக்கு ஒரு கலர்னு கேசட் அட்டைல எழுதுவார். அவரோட மாமா தான் மாரியப்பன்.  எப்பயாச்சும் வந்திட்டிருந்தவன், வர வர தெனைக்கும் வர ஆரம்பிச்சுட்டான்.  அப்பறம் தான் இந்த லெச்சுமிப் புள்ளயக் கூட்டிக்கிட்டு ஊரச் சுத்துறத வாடியான் கேட்டுக்கிட்டப் பாத்தேன், தெப்பத்து எறக்கத்துல பாத்தேன்னு தெருவுக்குள்ள ஒரே பேச்சா இருந்துச்சு.  இப்பத் தான் கொஞ்ச நாளா இங்கிட்டுத் தலயக் காட்டல.

ஏற்கனவே, போன வாரம், எங்க தெருப் புள்ளய, ஏங்கூட்டீட்டு சுத்துறனு கணேசன் பய, மாரியப்பங்கிட்ட சிலுவ இழுத்திருக்கான்.  இன்னைக்கு என்னடானா, மாரியப்பன கணேசன் குத்திட்டான்னு பேச்சு.  கணேசன்ட்ட எப்பமும், ஒரு கத்தி இருக்கும்.  எங்கிட்டயும் ஒரு மட்டம் காமிச்சிருக்கான்.  அத வக்கிறதுக்குண்ணே தோல்ல ஒரு உறை.  உறையோட இடுப்புல சொருகியிருப்பான்.  அந்தக் கத்தி விளிம்புல மொனை கூரா இல்லாம,  லேசா, சுழிச்சமானைக்கு இருக்கும்.  அதுல குத்துனா, உள்ளருக்க கொடல வெளிய இழுத்துட்டு வாறதுக்குத் தான் மொனையை லேசா சுழிச்சு தொரட்டி மாதிரி வேணும்னு சொல்லி செஞ்சிருக்கேன்னு சொன்னான்.

இந்த மாதிரிச் சாமானுகளச் செய்யுறதுக்குண்ணே ஒரு சில ஆளுக இருக்காகனு மணியாசாரி சொல்லீருக்காரு.  அவரும் கொல்லாசாரி தான்.  உளி, கடப்பாரை இதுக்கெல்லாம் கூர் வப்பாரு.  பெரிய வேலைன்னா, மாட்டு வண்டிச் சக்கரத்துக்கு பட்டை மாட்டுறது.  அது கொஞ்சம் நொரண்டு பிடிச்ச வேல.  சக்கரத்தைச் சுத்தி இருக்கிற இரும்புப் பட்டையக் கழட்டி, சக்கரத்து அளவுக்கு கொஞ்சம் கம்மியா, வெட்டி, சேத்து, பட்டை சுத்தளவுக்கு நெருப்பு வச்சு சூடாக்கி, சக்கரத்துல மாட்டணும்.  பட்டை போய் சக்கரத்துல இறுக்கமா உக்காரணும்.  இந்த வேல தெரிஞ்ச ஒரு சிலவங்கள்ல மணியாசாரியும் ஒருத்தர்.

ஒரு நா ராத்திரி அவரோட ஒக்காந்து பேசீட்டிருக்கப்ப, நைசா ஒரு விசயம் சொன்னாரு.  எனக்கும் அந்த மாதிரிச் சாமானெல்லாம் செய்யத் தெரியும்டா.  ஆனா, அந்தச் சோலியப் பாத்து வாற காசு நம்மட்ட நிக்காது.  சீக்கு, சிடுங்கல்னு புடுங்கீட்டுத் தான் போவும்.  ஆனா, ஒரு பயலுக்கு மட்டும் மின்னால அருவா மட்டும் செஞ்சு கொடுத்திட்டிருந்தேன்.  பட்டை மட்டும் அவனே கொணாருவான்.  ராத்திரியோட ராத்திரியா ஒக்காந்து அடிச்சு மட்டும் கொடுப்பேன்.

யாருண்ணே அது?

வெளிய யார்ட்டயும் சொல்லிராத, இப்ப வெயிலு முத்துவப் போட்டுட்டு உள்ள போய்ட்டு வந்திருக்குல்ல காளியப்பன்.  அதுக்கு மட்டுந்தான் செஞ்சு குடுப்பேன்.  அவன் எஞ்சேக்காலி.  சின்னப்புள்ளைல ஒண்ணு மண்ணாத் திரிஞ்சிருக்கோம்.  ஆனா, காசு வாங்க மாட்டேன்.  எதும் நமக்கு பிரச்சனைன்னா, பஞ்சாயத்துக்கு கூப்டா எடத்துக்கு வரும்.  லாரிக்கு அடியில பட்ட இருக்கும்ல, அதுல செஞ்சாத் தான் நல்லா கெனமா, இருக்கும்.  திருப்பியும் போடலாம்.

திருப்பியா?  புரியலண்ணே.

முன்னாடி மட்டும் வெட்டுவாய்ங்ஙனு நெனைக்காதடா.  அருவாள்ல மொன்னப் பக்கம் இருக்குல்ல.  அதுலயும் போடுவாய்ங்ங.

போட்டா?

உசுரு போகாது.  ஆனா, அருவாவ திருப்பிப் போடும் போது மொக்கையடியா விழும்.  ரத்தம் வராது.  ஆனா, காலு கை சேதாரமாகும்.  இழுத்துக்கும்.  போலீசு கேசு நிக்காது.

காலையில் பட்டறைக்கு போயிருக்கப்போ, மணியாசாரி தான் விசயத்தை முழுசாச் சொன்னாரு.  ஒங்க தெருக்காரன் கணேசன், மாரியப்பனக் குத்துனான்ல! உள்ள புடிச்சு போட்டுட்டாங்கடா.  லெச்சுமிப் புள்ளய ரெண்டாவது ஆட்டத்துக்கு, சைக்கிள்ல வச்சு முத்து டாக்கீஸ்க்கு மாரியப்பன் கூட்டீட்டுப் போயிருக்கான்.  இத கணேசன் பய பாத்துருக்கான். அத மனசுல வச்சுக்கிட்டு ரெண்டு பேரும் கொஞ்ச நாளா, எங்கணக்குள்ள பாத்தாலும், உர்ரு… உர்ருன்னே சுத்திட்டிருந்திருக்கானுக.  அன்னைக்கு ஏதோ பேசப்போயி கடேசில கைகலப்பாகிப் போச்சு.  கணேசன் கத்திய எடுத்துக் குத்திட்டான்.  கொடலு துண்டா வெளிய வந்திருச்சு.  அப்புடியே மாரியப்பன் கை வண்டியில குப்புறக் கவுந்துட்டான்.  அதுக்கப்புறம் கணேசன் பக்கத்துல கெடந்த செங்கக்கட்டிய எடுத்து மாரியப்பன் மேல வரிசைக்கு எறிஞ்சிருக்கான்.  மண்டயில, முதுகுல, குறுக்குல சரியான அடி.

இதுக்கப்புறம், அன்னைக்கு சாய்ந்தரமே கச்சேரில சரணடைஞ்சு உள்ள போன கணேசன் மதுர செயில்ல போட்டுட்டாங்க.  மாரியப்பன் பொழச்சி, லச்சுமியவே கட்டிக்கிட்டான்.  ஆனா, குனிய, நிமிர முடியாம குறுக்கு ஒடிஞ்சத ஒண்ணும் பண்ண முடியல. கழுத்தை இங்கிட்டு அங்கிட்டுத் திருப்ப முடியாது.

கடேசியா, சீசனுக்கு போயிருந்தப்ப அருவிக்கரைல கருவாயனப் பாத்தேன். ஊருக்குள்ள இனி வரமுடியாது மண்டையா!  மாரியப்பனோட தம்பி எப்படா என்னப் போட்டுத் தள்ளுவோம்னு காத்துக் கெடக்கான்.   அதனால, எதுக்கு திரும்ப பிரச்சனைனு, செயில்ல பழக்கமான ஒரு அண்ணாச்சிக்கு கையாளா திண்டுக்கல்லுக்கிட்ட இருக்கேன்.  ஒரு மட்டம் உள்ள போய்ட்டு வந்திட்டா, வாழ்க்கையே அம்புட்டுத் தான்னு சொல்லிட்டு அவன் பார்த்த பார்வையில், இளமையை, வாழ்க்கையைத் தொலைத்த வலி தெரிந்தது.

இரு தினங்களுக்கு முன் கொல்லப்பட்ட ரவுடியின் ஆதரவாளர் கணேசன் (36) என்பவரும் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை என்றும், இரு தினங்களுக்கு முன் திண்டுக்கல்லில் வெட்டிக் கொல்லப்பட்ட, ரவுடியின் கொலைக்கும், இதற்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ஈரோடு நண்பர்கள் நடத்திய சங்கமம் இனிதே நடந்து முடிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.  அது எங்கள் நண்பர்கள், இன்னும் சொல்லப்போனால், எங்கள் சகோதரர்கள் நடத்திய ஒரு விழா.  ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், சேர்தளத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகள்.

சர்ச்சைக்குரிய பதிவுகளில் பின்னூட்டம் கூட போடாமல், ஒதுங்கிச் சென்று தான் பழக்கம்.  நாட்டாமைத்தனமும் செய்வதில்லை.  எவ்வித குழு அரசியலிலும் தலையிடுவதில்லை. ஒரு சிலரின் பதிவுகளையும், பேச்சுகளையும் ஒதுக்கித் தள்ளி வைத்துப் போய் விடலாம் தான்.  ஆனால், அது மென்மேலும், கண்ணுக்குத் தெரியாத வகையில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் என்பதால் சேர்தளத்தின் சார்பில் இவ்விளக்கப் பதிவு.

எங்களின் (சேர்தளம் நண்பர்கள்) பெரும்பாலான பயணங்கள், விழா, சந்திப்பு ஆகியவை ஈரோடு நண்பர்கள் இணைந்தே நிகழ்ந்திருக்கிறது.  சென்ற ஆண்டு சங்கமத்தில் கூட சேர்தளத்துக்கென, நிகழ்ச்சியில் நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.  எப்போதும், ஒருவருக்கொருவர் அன்புடனும், அக்கறையுடனும், ஆலோசனைப் பரிமாற்றங்களுடன் தான் பயணிக்கிறோம் என்ற விசயம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திருப்பூர் வலைப்பதிவர்கள் தங்களுக்குள் குழுமம் அமைத்து, தலைவர், செயலாளர், பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களைத் தேர்ந்தெடுத்து சேர்தளம் என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஒரு அமைப்பு.  சேர்தளத்தின் எந்தவொரு விசயமும் எங்கள் குழும மின்னஞ்சல் மூலம், விவாதிக்கப்பட்டுத் தான் முடிவெடுக்கப்படுகிறது.  தற்சமயம் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தும் எண்ணம் இல்லை.  இருந்தால், நிச்சயம் அனைவருக்கும் அழைப்பு விடப்படும்.

சேர்தளம் நண்பர்கள், எங்கள் இலச்சினை அச்சிட்ட பின்னலாடைச் சட்டைகள் அணிந்து வந்தது குறித்து ஒரு விமர்சனம் வந்தது.  உங்கள் குடும்ப விழாவில் தான் நீங்கள் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிவீர்கள்.  அது போல எங்கள் சகோதரர்கள் நடத்திய விழாவில், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு, இப்பிரத்தியேக பின்னலாடைச் சட்டைகள் அணிந்து வந்தோம்.

விழாவை வெளியிலிருந்து பார்த்தவர்களுக்கு, கலந்து கொண்டவர்களுக்கு இத்தகையதொரு விழா சாதாரணமாகத் தெரியக்கூடும்.  விரல் நீட்டி விமர்சிப்பதும் எளிது.  ஒரு விழா நடத்துவதற்கு செலவு தவிர்த்து,  தகுந்த திட்டமிடுதலும், செயற்படுத்தலும், ஒருங்கிணைத்தலும், எத்தனை பேரின் உடல் உழைப்பும் வேண்டும் என்பதை என் சிறு அனுபவத்தில் உணர்ந்தேயிருக்கிறேன்.

என்னளவில் மட்டுமல்ல, விழாவில் கலந்து கொண்ட சேர்தளம் நண்பர்களும் மிகச்சரியாக, இன்னும் சொல்லப் போனால், நேர்த்தியாக நடத்தப்பட்ட விழா என்ற ஒருமித்த கருத்தையே கூறினார்கள்.  மனமுவந்து பாராட்டினார்கள்.

விழாவில், நான் உட்பட மேடையில் அடையாளப்படுத்தி பாராட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும், தகுந்த நேரம் கொடுத்து, ஒப்புதல் வாங்கியே பெயர் சேர்க்கப்பட்டது என்பதை நான் அறிவேன்.  இப்படியிருக்க, ஒரு சிலர் பரபரப்புக்காக, விளம்பரத்துக்காக விமர்சனம் என்ற பெயரில், கற்பனையாக எழுதுவது மாதிரியல்ல.  யார் யாரைப் பாராட்டுகிறீர்கள் என்ற பட்டியல் கேட்பதும் சரியல்ல.

விழா நடத்தியதில் குறைகள் இருந்தால், தனிப்பட்ட முறையில் நாசூக்காக சொன்னால் தவறில்லை.  அதை விடுத்து, சப்பையான குறைகளையும், கட்டுக் கதைகளையும் ஒரு சிலர், பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இது பதிவர்கள் சார்பில், பதிவர்கள் தவிர்த்து முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்ட பெரிய நிகழ்வு.  பதிவர்கள் குடும்பத்துடன், மகிழ்ச்சியாய் பங்கு பெற்றது இன்னும் சிறப்பு.  இவ்விழா பதிவர்களின் மதிப்பை உயர்த்திக் காட்டியதொரு முக்கிய நிகழ்வு.  தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பி, விழா நடத்திய சகோதரர்களை மனவருத்தத்தில் ஆழ்த்த வேண்டாம்.

நண்பர்கள் இருவர் சென்ற விடுமுறையில் ஏதாவது பயணத்தை திட்டமிடச் சொல்லியிருந்தனர். கடைசி நேர சூழ்நிலை மாற்றத்தால் திட்டமிட்ட இடத்துக்கு செல்ல முடியவில்லை. மூவரும் எங்காவது ஓரிடத்தில் சந்திக்கலாம் என முடிவு செய்து சென்னையில் கூடினோம். ஒரே ஒரு நாள் மட்டும் ஏதோவொரு விடுதியில் தங்கலாம் என முடிவு செய்து, புறநகரில் இருந்த அதி நவீன வசதிகள் நிறைந்த ஒரு ஆடம்பர விடுதிக்கு கிளம்பினோம்.

ஒரு நண்பர் சுந்தரம் – தனியார் நிறுவன மேலாளர். இன்னொருவர் முத்து – நிதி நிறுவன முகவர். விடுதிக்கு செல்லுமுன்னும், வழி நெடுகிலும் முத்து தான் புதியதாய் வாங்கிய அலைபேசியின் அருமை, பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். தொடுதிரையுடன் கூடிய அலைபேசி. ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்துடன் கூடியது. தேவையான மென் பொருள்களை ஏற்றிக் கொள்ளலாம். பியானோ இசைக்கலாம், மின்னஞ்சல்கள், இணையம் இயக்கலாம், ஒரு தடவலில் படங்களை மாற்றலாம். எந்த திசையில் அலைபேசியைத் திருப்பினாலும் படங்கள் மாறும், வரைபடம் மூலம் வழியைத் தெரிந்து கொள்ளலாம் என பெருமையடித்துக் கொண்டிருந்தார். இது போன்ற அலைபேசிகள் தான் இனி உலகையே ஆட்டிப் படைக்கப் போகிறது. மனிதர்களே இதுவன்றி இயங்க முடியாது என்ற அளவில் இருந்தது அவரது அலைபேசி புராணம்.

நண்பகலில் விடுதியை வந்தடைந்தோம். சப்பானிய கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டிருந்த முகப்பு. வரவேற்பறைப் பணியாளர்கள் முதல் இதர பணியாளர்கள் வரை அனைவரும் சப்பானியர்களின் உடை போன்று அணிந்திருந்தனர். ‘’ வடிவில் மொத்த கட்டிடமும் கட்டப்பட்டு நடுவில் நீச்சல் குளம், பக்கவாட்டில் உள் மற்றும் வெளி உணவு விடுதி இருந்தது. பெரும்பாலும் இரண்டடுக்கு கொண்ட தனித்தனி அறைகள்.

ஒவ்வொன்றிற்கும் நவரத்தினக் கற்களின் பெயர்கள் சூட்டியிருந்தார்கள். எங்களுக்கு ‘நீல மணிக்கல்’ என்ற பெயருடைய அறையை ஒதுக்கியிருந்தார்கள். நண்பர் சுந்தரத்திற்கு விடுதியின் உரிமையாளர் தொழில் முறை நண்பர் என்பதால், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

அறை முழுவதும் குளிரூட்டப்பட்டிருந்தது. நுழைந்ததும் உணவுண்ண அமரும் மேசை, நாற்காலிகளுடன் கூடிய ஒரு அறை, அதிலேயே அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப ஒரு சிறு அமைப்பு. அதிலிருந்து, கொஞ்சம் உயரமாய் இன்னொரு அறை. சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் தட்டைத் தொலைக்காட்சி, அதைப் பார்க்க வசதியாக மெத்தைகளுடன் கூடிய மூன்று பேர் அமரக்கூடிய இருக்கை. அந்த அறையிலிருந்து மேலே செல்ல படிக்கட்டுகள். மேல் தளத்தில் படுக்கை அறை.

அங்கும் ஒரு தொங்கு தொலைக்காட்சி. பின் ஒப்பனைக்காகவும், ஆடைகளுக்காகவும் எதிரும் புதிருமாக கண்ணாடியும், அலமாரியும், அதையும் கடந்து சென்றால் கழிப்பறையுடன் கூடிய குளியலறை. குளிக்குமிடம் கண்ணாடிச் சுவர்களால் தடுக்கப்பட்டிருந்தது.

மலேசியாவில் இது போன்ற வடிவமைப்புல கட்டப்பட்டிருந்ததைப் பார்த்த விடுதி உரிமையாளர் அதே வடிவமைப்பில் இங்கும் கட்டியிருந்தார். பெரும்பாலும், சப்பானியர்களே தங்கியிருக்கின்றனர். மிகக் குறைந்த சதவீதத்தில் இதர விருந்தினர்கள் தங்கியிருக்கிறார்கள். விடுதியின் பின்புறத்தில் மிகப்பெரிய புல்தரை மைதானம், சிறு விழாக்கள் நடத்த ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது. உடற்பயிற்சி சாதனங்களை உபயோகிப்பதற்கும், நீச்சல் குளத்திற்கும் கட்டணம் ஏதுமில்லை.

இதையெல்லாம் இவ்வளவு விளக்கமாகச் சொல்ல ஒரு காரணமிருக்கிறது. அறைக்கே வரவழைத்த இரவுணவு முடித்து பயணக்களைப்பில் மேல்தள அறைக்கு சென்று சீக்கிரமாகவே தூங்கி விட்டேன்.

காலையில், நண்பர் முத்து குட்டி போட்ட பூனை மாதிரி கீழ்தளத்தையே சுற்றிக் கொண்டிருந்தார். விபரம் கேட்டதும் என் மொபைலை பார்த்தியா? என்ற கேள்வியுடன் ஏறிட்டார். நான் படுக்கப் போகுமுன், கீழ்தளத்தில் தான் இருந்தது. சொன்னேன். கீழ்தளத்தையே தலைகீழாய் புரட்டிப் போட்டு விட்டார். மேசை, மெத்தை, தலையணை, நீச்சல் குளத்தடியில் என இண்டு இடுக்கெல்லாம் தேடி விட்டார். உள்ளங்கையளவு உலகத்தைக் காணவில்லை.

1800 தொடர்பெண்கள், படங்கள், அசைபடங்கள், பிரத்தியேகமான மென்பொருள்கள் அனைத்தும் போயே போய் விட்டது. அவர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், மணிச்சத்தம் கேட்கிறது. எவரும் அழைப்பை எடுக்கவில்லை. வருத்தத்தின் எல்லையில் இருந்தார். வேறு ஏதேனும் கேட்டால் அழுது விடுவார் போல முகத்தோற்றம். இவரால் சாதாரணமாக இயங்கக் கூட முடியவில்லை. எப்போதும் இது போன்ற சூழ்நிலையில் என்னிலிருந்து எந்த எதிர்வினையும் இருக்காது. ரொம்பவுமே அமைதியாகி விடுவேன். விசயத்தை மட்டும் கேட்டு விட்டு திரும்பவும் தூங்கி விட்டேன்.

ஒரு கட்டத்தில் மிகவும் கோபமாகி, உணவு கொண்டு வந்த நபர்கள் தான் எடுத்திருப்பார்கள் என முடிவு செய்து விடுதி மேலாளரிடம் புகாரளித்தார். அவரும் இரு ஆட்களைக் கூட்டி வந்து திரும்பவும் அறையை அலசி ஆராய்ந்தார். பலனில்லை. நேற்றிரவு பணியாற்றியவர்கள் பணி முடிந்து அதிகாலையில் சென்று விட்டார்கள். செல்லும் போது முழுக்க சோதித்து அனுப்புவது தான் எங்கள் வழக்கம் இருப்பினும் இப்போது செல்லும் பணியாளர்களைக் கூட முழுமையாக சோதித்து அனுப்புமாறு வாயில் பாதுகாவலர்களுக்கு மேலாளர் உத்தரவிட்டார். நேற்றிரவு பணியாளர்களுக்கும் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் எடுக்கவில்லை என்று சொன்னார்கள். ஒரே ஒருவரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அறையில் இருந்த மூவருக்கும் பணியாளர்கள் மேல் மறுக்க முடியாத சந்தேகம் இருந்தது. மணியடிப்பதால் இப்போது எங்காவது ஒளித்து வைத்து விட்டு, ஓரிரு நாட்கள் கழித்து இங்கிருந்து வெளியே எடுத்து செல்லலாமென நினைத்திருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு, அறையைச் சுற்றியுள்ள செடிகள், புல்தரை அனைத்திலும் ஒரு முறை தேடி விட்டு, கிடைத்தால் தகவல் தரச்சொல்லி விட்டு அறையைக் காலி செய்தோம்.

பின் அவரவர் ஊருக்கு கிளம்பினோம். நண்பர் முத்து அவர் அவராகவே இல்லை. இயல்பு மீறிய புது மனிதராக இருந்தார். தன் மகிழுந்தில் உலகம் தொலைத்த வருத்தத்துடன் அவரே ஓட்டியபடி மதுரை நோக்கிப் பயணமானார். நான் புகைவண்டியில் ஊருக்கு வந்து கொண்டிருக்கும் போது, முத்து எண்ணிலிருந்து ஒரு அழைப்பு. தாங்க முடியாத ஆச்சரியத்தில் எடுத்தால், மறுமுனையில் முத்துவே. கூமுட்ட…. கூமுட்ட…. என் பைக்குள்ள தாண்டா மொபைல் இருக்குது! பையில் யாராவது தேடிப்பாத்தமா? என திட்டினார். மனதுக்குள் யார் கூமுட்டை? என நினைத்துக் கொண்டேன். மதுரை செல்லும் வழியில் திருச்சியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கிச் செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார். அங்கே, பையின் பக்கவாட்டில் ஏதோ எடுக்க விழையும் போது அலைபேசி கையில் தட்டுப்பட்டு எடுத்திருக்கிறார்.

முதலில், விடுதிக்கு அழைத்து விசயத்தை சொல்லச் சொன்னேன். இதில் விடுதிப் பணியாளர் மீது சந்தேகப்பட்டது மிகப்பெரிய தப்பு என உறைத்தது. முன் பின் தெரியாதவரை சந்தேகப்பட நமக்கு என்ன உரிமை இருக்கிறது? ஏன்? எப்படி? தவறு செய்யாத அந்த பணியாளரின் மனம், சந்தேகத்தோடு விசாரிக்கும் போது என்ன பாடுபட்டிருக்கும்? எவ்வளவு மனவருத்தம்? மன உளைச்சல்? கேள்விகள் நீண்டு கொண்டேயிருந்தது. விடுதிக்கு அழைத்து, மன்னிப்பு கேட்டு பணியாளரிடமும் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்கச் சொன்னேன்.

அமைதியான சூழ்நிலையில், அற்புதமாய் கழிந்திருக்க வேண்டிய ஒரு நாளை, சிறு நினைவுக் குறைவால் தானும் நிம்மதியிழந்து, மற்றவர்களையும் இழக்க வைத்து வீணாக்கி விட்டார்.

இவ்வளவு களேபரம் நடந்துட்டிருக்கு.  கொஞ்சங்கூட கவலைப்படாம, கண்டுக்காம, தூங்கிட்டிருந்தியேடா?னு எனக்கு கொடுமானம் கிடைச்சது தனிக்கதை.

Follow

Get every new post delivered to your Inbox.

%d bloggers like this: