ஒரு சில நண்பர்களை நாம் பார்க்கவோ, பேசியிருக்கவோ ஏன் மின்னஞ்சல் தொடர்பு கூட இருந்திருக்காது. இல்லை. இருந்தும் அய்யனார் என்னைப் புரிந்திருக்கிறார். அவரது ரசனை, மன ஓட்டம் நான் கணித்ததாகவே இருந்தது. என் கருத்து என்னவாக இருக்குமென்பதை, அவராகவே சொல்கிறார். பொருந்தியே இருக்கிறது.
சிங்கப்பூரிலிருந்து முன் தினம் வந்த கதிர் அய்யனாருடன் வந்திருந்தார். அவர் பதிவொன்றில் எனக்கு பிடித்தது – பாகிஸ்தானியுடன் பயணித்த அனுபவத்தை ஒரு குறும்படத்தின் அம்சங்களுடன் எழுதியிருப்பார். மிரட்டும் தோற்றமாயிருந்தாலும், பழக மிகச்சுவாரசியமான, இலகுவான மனிதராயிருந்தார். இவர் அய்யனாருக்கு சரியானதொரு இணை.
செல்வேந்திரனும், சிவக்குமரனும் அடிக்கடி சந்திக்கும் நண்பர்கள். எல்லாமே இணைய நட்புகள்.
அய்யனார் கோவை வருவதாகவும், வனம் புக வேண்டும் என்றும் தொலைபேசினார். மிகக்குறுகிய கால இடைவெளி. காந்தி ஜெயந்தி விடுமுறையுடனான வார இறுதியாகையால், மலைப்பிரதேசங்களில், சாதாரண அறை கூட கிடைக்காத நிலை.
அண்ணாச்சி, சஞ்சய், செல்வேந்திரனுடன் ஏற்பாடுகளுக்குத் தயாராய் நானும். மற்ற நேரங்களில், வருகிறோம் என்று தகவல் தெரிவித்தாலே, நாம் கிளம்புமிடத்திலிருந்து நம்மை தொலை பேசியில் தொடரும் விடுதிக்காரர்கள், நாங்கள் தேதி சொன்னதும் அறை காலியில்லையுடன் முடித்துக் கொண்டார்கள்.
பயணத்தேதிக்கு முன் காலை, தேவராஜன், தம் நண்பரின் உதவியுடன் தங்குவதற்கு ஆவன செய்தார். அதற்குப் பின், வரும்/கிளம்பும்/திரும்பும் நேரம்/நண்பர்கள் பற்றி விவாதித்து முடிக்கப்பட்டது.
இரண்டாம் தேதி காலை அய்ஸ், கதிர், சிவக்குமரன் கோவை வந்து சேர, அண்ணாச்சியும், சஞ்சயும், மழையும் மாலையில் வழியனுப்ப பயணம் தொடங்கியது. அண்ணாச்சி வராததால், எனக்கு மேலதிக பொறுப்பும், கூடவே அறிவுரைகளும். வழிநெடுக, அய்யனார் மழைத்தூறலுக்கு தலையும், பனிமூட்டத்துக்கு வியப்பும் காட்டினார். அனுபவித்தார்.
பொக்காபுரம் என்ற இடத்தில் தங்கும் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உதகை, மசினகுடி – அங்கிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் பொக்காபுரம். விடுதிப் பொறுப்பாளரை வழிநெடுக முயற்சித்தும், அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவரது தம்பி தொடர்பு கொண்டார். வழியும், வேறு தொடர்பு எண்ணும் வாங்கிய பின் தான் எனக்கு நிம்மதி.
மசினகுடியிலிருந்து, பொக்காபுரம் செல்லும் வழியே வனம் தான். மான் கூட்டம், காட்டெருமை மற்றும் கழுதைப்புலி காணக் கிடைத்தது. பொக்காபுரத்திலிருந்து விடுதிக்கு செல்வதற்கு குறுகிய மண்பாதை மட்டுமே. சுற்றிலும், மூங்கில் புதர்கள் சூழப்பட்ட இடத்தில் – வண்டி நிறுத்துமிடம்
ஒற்றைக் குழல் விளக்கு வெளிச்ச, சிறு பாதையில் நடந்தால் விடுதி. வாசலில் இருபக்கமும் மிகப்பெரிய பாறை. மேலாளர் வரவேற்று, எங்களின் அறைக்கு கூட்டிச் சென்றார். அறைகள் மூங்கில்களின் முன்/பின் புலத்தில் இருந்தன. விடுதி மிகச்சிறந்த ரசனையாளர்களால், சுற்றிலும் வேலிப் பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்டிருந்தது. இடமாக வாங்கிய போதிருந்த மரங்கள், மூங்கிற்புதர்கள், பாறைகள் எதையும் அப்புறப்படுத்தாது, உள்ளது உள்ளபடியே விட்டு, அதனூடே அறைகளை அமைத்திருக்கிறார்கள்.
காய்ந்த இலைகளில் விழும் மழைச்சத்தமும், மூங்கில்கள் காற்றிலசைந்து உராயும் சத்தமும் புதிதாய் இருந்தன.
காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ?
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ?
நமக்கு வேண்டியதை உண்ண தேர்ந்தெடுக்கும் வசதியுடன், தனியிடத்தில் உணவு ஏற்பாடுகள். அமர்வதற்கேதுவாய் அரைவட்ட மூங்கிலிருக்கைகள். தட்டு வைப்பதற்கு மரத்தடிகள். எங்களின் இரவுணவுக்காய் பணியாளர்கள் விழித்திருந்தனர். மாரி என்ற பணியாளர் கடைசி வரை எங்களுக்கான தனிக்கவனிப்பாளரானார்.
மறுநாள் காலை வழக்கமான சுற்றுலா இடங்களை தவிர்த்து, மனம் போன போக்கில் கூடலூர்ப் பாதையில் பயணித்தோம். துளிர்த்த மழைத் துளி, சுழித்தோடும் காட்டாறு ரசித்தாவாறே பயணம். மண்ணுடன் கலந்த நீரோடியதால், ஆற்றுக்குளியலாசை துறந்தோம். இஷ்டம் போல் இடை நிறுத்திக் கொண்டோம். நீரருந்த வந்த மான் கூட்டம் யாரடா இவர்கள்? என வெருண்டன. தனித்த காட்டெருமை தலை தூக்கி, என்ன? என்ற கம்பீரம் காட்டியது. மூங்கில் மரங்கள் பாதைக்கு இருட்கூரை வேய்ந்திருந்தன.
இருப்பிடந்திரும்பி, இளைப்பாறிய சிறிது நேரத்தில், வனமழைத்துச் செல்லும் நண்பர் வந்து விட்டார். அவருடைய ஜீப்பில் பயணம். நண்பர் அவ்வூரைச் சேர்ந்தவர். வெளிநாட்டுப் பயணிகளை மலையேற்றத்திற்கும், வனச்சுற்றுக்கும் அழைத்துச் செல்பவர். பிரபல விலங்காராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டியாயுமிருந்திருக்கிறார். மேலும், குடியிருப்புகளுக்கு வரும் பாம்புகளைப் பிடித்து வனத்திற்குள் விட்டு வரும் சேவையும் செய்கிறார். வனங்கள், வனவிலங்குகளைப் பற்றியும், வன அதிகாரிகளுடனான கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இருளில் நம் கண்களுக்கு அகப்படாத விலங்குகள் அவருக்கு மட்டும் புலப்பட்டன. முதலில் யானைகள். பின் காட்டெருமைகள் – வண்டியின் விளக்கணைத்து, ஆண் காட்டெருமை போன்று இவர் ஒலியெழுப்பியவுடன், காட்டெருமைக் கூட்டத்திலிருந்து பதில் ஒலி வந்தது அசாத்தியம்.
வழியெங்கும் மான் கூட்டங்கள் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன. குடியிருப்புகளை ஒட்டிய இடங்களில் மான்கள் அதிகம் இருக்குமாம். மனிதநடமாட்டம் இருக்கும் பகுதிகளில் வேட்டையாடும் மிருகங்கள் வரும் வாய்ப்பு குறைவாம்.
மழையால், மண்பாதைகள் சகதியாயிருந்ததால், வெவ்வேறு இடங்களுக்கு கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் சுற்றியலைந்தோம். விடுதி திரும்பும் வழியில், வேகமாய் சென்று கொண்டிருந்த வண்டி திடீரென்று நிறுத்தப்பட்டது. எதிரே பாதையில் ஆறேழு யானைகள் குட்டியுடன். முன் நின்று தென்னைக்கீற்றிழுத்துக் கொண்டிருந்த யானை, எங்களைக் கண்டு கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது. குட்டியை இரு யானைகள் தங்களுக்கிடையில் லாகவமாய் பத்திரப்படுத்தின.
நண்பர் முகப்பு விளக்கணைத்து, ஒரு வினோத குரலெழுப்ப, கூட்டத்திலேயே மிகப்பெரிய யானை எங்களைத் தாக்க ஆவேசமாய் வந்தது. யானை எங்களை அடைய சில அடிகளே இருந்தது. அதற்குள் நண்பர்கள் பயந்து வண்டியை பின்னே எடுக்கச்சொல்லி குரல் கொடுக்க, நண்பர் வண்டியை பின்னோக்கி செலுத்தினார். எங்களைத் தாக்க வந்த யானையும் கூட்டத்தை ஒருங்கிணைத்து பக்கப்பாதையில் சென்றது.
பின் நண்பரிடம் விசாரித்ததில், ஒவ்வொரு யானைக்கூட்டத்திற்கும் ஒரு யானை தலைமையேற்று நடத்திச் செல்லுமாம். நண்பர் எழுப்பிய வினோத ஒலி, ஆபத்தைக் குறிக்கும் சமிக்ஞை. ஒலி கேட்டு, ஏதோ ஆபத்து என்று தலைமை யானை எங்களைத் தாக்க வந்தது. நண்பரும் வண்டியை பின்னோக்கி செலுத்த தயாராய்த் தான் இருந்தார். கோவில்களிலிலும், முகாம்களிலும் பார்த்த யானைக்கும், இதற்கும் நிறைய வித்தியாசங்கள். எங்களை நோக்கி ஓடி வந்த போது ஏதோ ஒரு கறுப்பு பிரம்மாண்டம் நம்மை நோக்கி வருவது போல் இருந்தது – ஆங்கிலப்படங்களில் டைனோசர் மற்றும் விநோத விலங்குகளின் அருகாமை காட்சி போல.
நானும், செல்வேந்திரனும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தோம். மற்றவர்கள் எச்சரிக்கையாக பின்னிருக்கையில்
செல்வேந்திரனுக்கு அதே இரவிலும், கற்பனையிலும் துரத்திய யானை தான்
மேலும், சூழ்நிலைக்கேற்றவாறு எப்படி தப்புவது என்பதும், எங்கள் வன வழிகாட்டிக்கு தெரிந்தே தான் இருந்தது.
(கிட்டத்தட்ட எங்களது அனுபவமும் இந்த யூ ட்யூப் படத்தை ஒத்தே இருந்தது. இரவானதால் படமெடுபடவில்லை)
இரவு ஒன்பதரைக்கு ஆரம்பித்த பயணத்தை, ஒரு மணிக்கு முடித்துத் திரும்பினோம். இரவுணவு முடிக்கும் போது மணி இரண்டு. காலை ஊர் திரும்ப ஆயத்தமாயிருந்த வேளையில், விடுதி நண்பர் அருகிருக்கும் ஒரு வீட்டை காண்பிப்பதற்காய் கூட்டிச் சென்றார். அறையின் பக்கவாட்டுப் பாதையில் வேலி தாண்டிச் சென்ற போது யானைகள் நேற்றிரவு வந்து சென்றிருப்பதற்கான தடயங்கள்.
யானைகள் சேதப்படுத்த முடியாத கருங்கற்களால் கட்டப்பட்ட ரசனையான பரந்த வீடு. உரிமையாளர் வெளி நாட்டிலிருந்து வந்து ஓரிரண்டு நாட்கள் தங்கிச் செல்வாராம். இங்கும் சுற்றிலும் மூங்கில் புதர்கள். வீட்டின் முன் மூங்கில் துண்டுகளில் துளையிட்டு சிறு செடிகள் வளர்க்கப்பட்டு, தொங்க விடப்பட்டிருந்தன.
மூங்கில்கள் இப்பகுதி மக்களின் வாழ்வின் முக்கியமாய் இடம் பிடித்திருக்கிறது. சிறு சிறு பொருட்கள் மூங்கில்களாலே செய்கிறார்கள். தங்குமிடத்தில் சுவர் எழுப்புவதற்கு பதில் மூங்கில், மேசை, நாற்காலிகள், கைத்தாள் செருகி வைப்பதும் மூங்கில் குழலில் தான். ஏன் அறைச்சாவி இணைத்திருப்பதும் சிறு மூங்கில் துண்டில் தான். மண்ணும், மழையும், மரமும், மனிதர்களும் மூங்கில்களே!
மேலும் படங்களுக்கு - பொக்காபுரம்

Comments on: "மூங்கில்" (66)
ஆஹா….. ரொம்ப ரசனையான இடமா இருக்கே!
கொஞ்சம் புகையுதே…………தெரியுதா?
மூங்கில்காடுகள் !!!! அதில் வேணுகானம்!!!!
ரொம்பவுமே ரசனையான இடம் டீச்சர்.
ம்… புகையறது தெரியுது.
//நானும், செல்வேந்திரனும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தோம். மற்றவர்கள் எச்சரிக்கையாக பின்னிருக்கையில்
செல்வேந்திரனுக்கு அதே இரவிலும், கற்பனையிலும் துரத்திய யானை தான்//
இதுக்கு தான் கும்கியை கூட்டிட்டுப் போங்கன்னு சொல்றது..
வழியனுப்புதலோட எங்க பயணம் முடிஞ்சதுல ரொம்பவே வருத்தம் தான்.. அடுத்து பார்ப்போம்..
//வழிநெடுக, அய்யனார் மழைத்தூறலுக்கு தலையும், பனிமூட்டத்துக்கு வியப்பும் காட்டினார்//
எப்டி இப்டி எல்லாம்? பின்றிங்களே வெயில்ஸ்..
கும்கி தான் குலதெய்வத்தைப் பார்க்க போயிட்டாரே!
// வழியனுப்புதலோட எங்க பயணம் முடிஞ்சதுல ரொம்பவே வருத்தம் தான்.. அடுத்து பார்ப்போம்… //
செல்வேந்திரன் நீங்க வராததால பின்னிருக்கையை, அவரோட அறை மாதிரி ஆக்கீட்டாரு
நன்றி சஞ்சய்!
ஆளுமையான வார்த்தைகள்,வர்ணிப்பு,உழைப்பு. மொத்தத்தில் சிறப்பு. டீச்சர் சொன்னதும் உண்மைதான்.
நன்றி ஜோதிஜி!
காணொளி பார்த்தால் உங்கள் நிலை புரிந்தது..
தீபாவளி சிறப்பு பயணம் ஏதேனும் உண்டா ?
வாய்ப்பிருந்தால் தகவல் கொடுங்கள்
)
தீபாவளியன்று ஊரில் இருக்க வேண்டும்ண்ணே! இல்லைன்னா, வண்டி கட்டி திருப்பூர் வந்திருவாங்க. அடிக்கிறதுக்கு
என்னை கூப்பிடவே இல்ல
((
பயணத்திற்கு முதல் நாள் தான் முடிவானது கார்க்கி! மேலும் நாம் சென்று தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே தான் இந்த இடமும்.
nice, thanks for sharing
நன்றி! குப்பன்.
படு சுவாரஸ்யமாக உங்கள் அனுபவங்களை
எழுதியிருக்கிறீர்கள். ‘அ.கா.புலி/ச.வெ.மான்’ என்ன செய்துகொண்டிருந்தது? ‘அயல்வெளிக் குறிப்புகள் – புதிய அத்தியாயம் வெளிவரும் என்று நம்பலாம்
நம்மளை எல்லாம் கூப்பிட மாட்டீங்களா தல?
அனுஜன்யா
அடர்கானகப் புலி இப்போ சமவெளி மானாக மாறியதால் சாதுவாக இருந்தது
நீங்க அப்போ மூணாறு வந்திருந்த விசயம் எங்களுக்கும் தெரியும் தல
சுவாரஸ்யமான பயணமாகவே இருந்திருக்கிறது என்பது வரிகளில் புரிகிறது
வாய்ப்பு கிடைத்தால் வருகிறோம்
நிச்சயம் வாங்க சின்னப்பாண்டி! முடிஞ்சா பெரிய பாண்டியையும் கூட்டிட்டு வாங்க!
சுற்றிலும் மூங்கில் காடுகள் நிறைந்திருக்கும் வெற்றிடத்தில் அமர்ந்து ரசித்தல் வார்த்தைகளில் விவரிக்க இயலா இன்பம் !
என்ஜாய் பண்ணியிருக்கீங்க!
)
நன்றி ஆயில்ஸ்!
மூங்கில் காடுகளுக்குள் பயணம் சுகமா இருக்கு, நீங்க அனுப்பும் டிக்கட்டுக்காக நானும் சின்னபாண்டியும் வெயிட்டிங்
டிக்கெட் தயாராய் இருக்கிறது – காட்டுக்குள் போக
பாண்டிகள் சீக்கிரம் வந்து சேரவும்.
//கானா பிரபா
மூங்கில் காடுகளுக்குள் பயணம் சுகமா இருக்கு, நீங்க அனுப்பும் டிக்கட்டுக்காக நானும் சின்னபாண்டியும் வெயிட்டிங்//
பாஸ் நீங்க செம ஃபாஸ்ட் இப்பத்தான் ஃபீல் பண்ணுனேன் இங்க வந்து குமுறிட்டீங்க !
ம்ம் வேண்டிய ஏற்பாடுகள் ஆகட்டும் ஆகட்டும்
ம்… ம்…. தயார்.
சொல்லமாட்டியலாண்ணே
நீங்க எப்பனாலும் வாங்கண்ணே! நாம போகலாம்.
அழகான பயணம். ரசனையோடு
மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி வாசுதேவன்!
கிர்ர்ர்ர்ர்ர்…….,
நீங்கள் வராதது வருத்தம் தான்.
“காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ?
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ?”
சூப்பருங்ண்ணா…….
தம்பி! அது திரைப்படப் பாடல். நான் எழுதுனது இல்லை
இதை படிச்சு முடிச்சதும் நான் என்ன நினைத்திருப்பேன் என்பதை நீங்களே அறிவீர்கள்.
கொசுறு:
வார்த்தை பிரயோகங்கள் சில இடங்களில் நிறுத்தி திரும்ப வாசிக்க வைத்தது வெயிலான்.
நினைத்ததறிவேன் நண்பா!
//ஒரு இடத்தில் அய்யனார் இறங்கும் போது, அவரது கவிதையொன்றை உரக்கச் சொல்ல, பனிமூட்டம் விலகி மலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது.//
நீங்க சொல்றத பார்த்தா அய்யனார் எழுதுற கவிதையெல்லாம் பனிமூட்டத்துக்கு தான், மனிதர்களுக்கு அல்ல என்பது போல இருக்கிறதே!
(பத்த வச்சிட்டியே பரட்ட)
பத்த வைக்கிற வேலையெல்லாம் செல்லாது வால்!
பதிவின் முதல் பத்தியை திரும்பவும் படித்து பார்க்கவும்.
அட அது அவர் சொன்ன டயலாக் தானா!?
அவர் நின்னா புலியே பயந்து ஓடுமே!
பனிமூட்டமெல்லாம் ஜுஜுபி!
அய்யனாருக்கு அடர்கானகப் புலி னு இன்னொரு பேர் இருக்குது வால்!
அருமையாக எழுதியிருக்கீங்க.
கோத்தகிரியில் பிறந்து வளர்ந்தால் என்னவோ முப்பது வருடங்களாக மலை பிரதேசம் மேல் அவ்வளவு ஈடுபாடு வரவில்லை! இப்போது பெங்களூரில் இருப்பதால், குடும்பத்தை அழைத்து செல்ல ஒரு வாய்ப்பு.
நீங்கள் தங்கிய இடத்திற்கு – விவரம் – தொடர்பு எண் – எனக்கு இமெயில் பண்ணுங்க நண்பரே!
ஆமாம் – பெங்களூரு – மைசூர் வழியாகவும் அங்கு செல்லலாம் தானே? யானை பயம் இல்லையா?
நன்றி விஜய்சங்கர்.
தனிமெயிலில் விபரங்கள் அனுப்புகிறேன்.
பெங்களூர் / மைசூர் வழியாக செல்லலாம். கோத்தகிரியில் பிறந்துட்டு யானைக்கு பயப்படலாமா?
நல்லது…
யானைகள் கவிதை படிக்கும் வழக்கமில்லையே….
அப்புறம்.,
அடர் கானக புலி சமர்த்தாக இருந்ததா?
டீம் மாற்றி மாற்றி பின்னுகிறீர்கள்…
எண்ணம் போல வாழ்வு…
உங்கள் நிறுவனத்தில் ஏதேனும் ஒரு கணக்குபிள்ளை வேலை காலியாகவிருந்தால் சொல்லியனுப்பவும்.
இங்கேயும் லேசாக புகைந்துகொண்டிருக்கிறது.
நடை அபாரம்.
படித்தப்பின் எனது ட்ராப்ட்டில் இருந்த அனுபவத்தை அழித்துவிட்டேன்.
டீம் மாற்ற வில்லை. மாறி விட்டது.
வேலை காலியாகும் போது சொல்லியனுப்புகிறேன்.
யானை வரும் போது உங்களைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். கும்க்கியாச்சே
அருமையான அனுபவம். அங்கிட்டு வர மனசு ஏங்குது.
வாங்க நாதாஸ்!
///இருளில் நம் கண்களுக்கு அகப்படாத விலங்குகள் அவருக்கு மட்டும் புலப்பட்டன. முதலில் யானைகள். பின் காட்டெருமைகள் – வண்டியின் விளக்குகளணைத்து, ஆண் காட்டெருமை போன்று இவர் ஒலியெழுப்பியவுடன், காட்டெருமைக் கூட்டத்திலிருந்து பதில் ஒலி வந்தது அசாத்தியம்///
செல்வாவின் திரண்ட கற்பனையை இந்த இடத்தில எதிர்பார்கிறேன்! காட்டெருமைக்கு விட்ட SMS- ஸும் reply வந்த SMS- ஸும்.
செல்வா உங்ககிட்டருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்
என்னால வரமுடியாத சூழ்நிலை
)
எல்லாரையும் பாத்திருக்கலாம்
பயணம் நல்லபடியா அமைஞ்சது சந்தோசமே
நன்றி கார்த்திக்.
அருமையான அனுபவம், இன்னும் கொஞ்சம் சத்தமாக அய்ஸ் கவிதை (பாடி இல்ல) கத்தி இருந்தால் மலையே ஆட்டம் கண்டும் இருக்கும்!
//அவர் நின்னா புலியே பயந்து ஓடுமே!
பனிமூட்டமெல்லாம் ஜுஜுபி!//
வால் நான் பயந்து ஓடுவதை இப்படியா பப்ளிக்கா சொல்வது:)
நல்ல அனுபவம் தான் குசும்பன்!
வெயிலான், நேர்த்தியான பயணக்கட்டுரை. இதைக் காட்டிலும் சிறப்பாக எழுதிட முடியும் என்று தோன்றவில்லை.
யானை நம்மை நோக்கி வருகையில் என் குடல் வாய்க்கு வந்து விட்டது. சில்லிட்டுப் போனேன்.
எஸ்.எம்.எஸ்ஸை விட உமாகதிர் அடித்த எவர்கீரின்
“சபாரி வந்துட்டா அவ்வளவுதானா…?!”
தசாவதார சேசிங்கில் கொஞ்சம் கொஞ்சம் எச்சில் துப்ப சொன்ன ஜோக்கை விஞ்சியது…
நன்றி செல்வா!
// இதைக் காட்டிலும் சிறப்பாக எழுதிட முடியும் என்று தோன்றவில்லை. //
இது கொஞ்சம் ஓவர்
உமாகதிர் சொன்ன ஜோக்குகள் எல்லாமே எவர்கிரீன் தான்.
நீங்களும் உங்கள் கோணத்தில் அனுபவங்களை எழுதுங்கள்.
ம்ம், சந்தோசம், இப்படியே எழுதிட்டு இருங்க.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ( ஒண்ணுமில்ல…. ஒரு பொறாமை தான்)
// ஒண்ணுமில்ல…. ஒரு பொறாமை தான் //
ரொம்பவே என்ஜாய் பண்ணியிருக்கீங்கன்னு தெரியுது. வாழுங்க.
நன்றிங்க.
காய்ந்த இலைகளில் விழும் மழைச்சத்தமும், மூங்கில்கள் காற்றிலசைந்து உராயும் சத்தமும் புதிதாய் இருந்தன.
காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோமண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோஅது தன்னைச் சொல்லுதோஇல்லை உன்னைச் சொல்லுதோஅட! புல்வெளியில் ஒரு வானவில் விழுந்ததுஅதோ அதோ அதோ அங்கே,ஐயையோ! வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோஅவை வண்ணச் சிறகுகளோவானவில் பறக்கின்றதோஅழகு அங்கே இங்கே சிரிக்கின்றதுபுதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றதுமேகம்போல் காட்டை நேசிமீண்டும் நாம் ஆதிவாசிகாற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ?
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ?
மேகம்போல் காட்டை நேசி
மீண்டும் நாம் ஆதிவாசி///
இது தான் ஹைலைட்…. எங்களையும் அங்கே கூட்டீட்டு போய்டுச்சு.
அது சினிமாப் பாட்டு. இந்த இடத்திற்கு பொருத்தமா இருந்தது.
நன்றி உமா!
இடையில் ஒரு இடத்தில் அய்யனார் இறங்கும் போது, அவரது கவிதையொன்றை உரக்கச் சொல்ல, பனிமூட்டம் விலகி மலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது.
அய்யனாரை தான்சேன் என்பதா, எங்க ஊரு பாட்டுக்காரன் என்பதா
(உண்மையிலேயே எங்க ஊர்தாங்க அவரு)
ஓடிப்போன பனிமூட்டத்தைக்கேட்டால் தெரியுமோ?
அய்யனார் உங்க ஊரு பாட்டுக்காரனா?
நீங்களும் நல்ல பாட்டுக்காரர்னு கேள்விப்பட்டேன்.
நன்றி முத்துவேல்!
சுவாரஸ்யம்…
நன்றி..
மிக்க நன்றி!
இந்த நாட்களில் நினைவுக்கு வந்திருக்கிற பயணம்போகிற ஆசையை அதிகரித்திருக்கிறது பதிவு…
சீக்கிரமே ஊருக்கு போகணும்!
நன்றி தமிழன்-கறுப்பி.
உங்கள் “ காட்டு வழி பயணத்த “ அருமையா சொல்லிட்டீக….
படங்கள் மிகவும் பிடித்தம்….
மாரிய…பற்றி..நினைவு நன்றி கூறுதல்…..ஓர் ஈர்ப்பு…
அங்கே நிற்கிறார்…வெயிலான்……
வாழ்த்துக்கள்……
நன்றி பொன்கா!
பொறாமையை தூண்டும் பதிவு. கடைசி வரிகள் தூக்கல்.
(நாங்க வரும் போது ஒரு குட்டி எலியைக்கூட காண்பிக்காமல்.. அவ்வ்வ்வ்.. சீக்கிரம் அடுத்த டிரிப் போட்டுறவேண்டியதுதான். ரெடியா இருங்க..!)
எம்.எம்.அப்துல்லா
சொல்லமாட்டியலாண்ணே //
வந்துட்டுதான் மறுவேல பாப்பாக.!
நீங்க இரவு தயாராயிருந்திருந்தா காட்டுக்குள் போயிருந்திருக்கலாம். அடுத்த பயணத்திற்கு தயார்.
அப்துல்லாண்ணே இங்க வந்துட்டு போயிட்டார் ஆதி!